மருத்துவ மாணவிகள் 'நூதன திருமண' போராட்டம்!
மும்பை: மருத்துவ படிப்பு காலத்தை நீட்டிப்பு செய்வதை எதிர்த்து மும்பையில் மருத்துவ மாணவிகள், மத்திய அமைச்சர் தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு நூதன போராட்டம் நடத்தினர்.
கிராமப்புறங்களில் கட்டாய மருத்துவ சேவை மற்றும் எம்.பி.பி.எஸ் படிப்பை 6.5 ஆண்டாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக மருத்துவ மாணவர்களிடம் சாம்பசிவ ராவ் கமிட்டியினர் கருத்துக்களை கேட்டு வருகிறார்கள்.
ஆனால் இந்த திட்டம் இன்னும் அமல்படுத்தாத நிலையில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் முதல்வர் கருணாநிதியின் வேண்டு கோளை ஏற்று கடந்த 4ம் தேதி போராட்டம் நடத்திய அனைத்து மாணவர்களும் வாபஸ் பெற்றுவிட்ட நிலையில் நேற்று மும்பையில் மருத்துவ மாணவிகள் வித்தியாசமான போராட்டத்தை நடத்தினர்.
மத்திய மும்பையில் உள்ள கே.ஈ.எம் மருத்துவ மாணவ-மாணவிகள் விநோதமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ படிப்பு கால நீட்டிப்பு காரணமாக தங்களது திருமணம் தாமதமாகும் எனவும், இதர்காக மத்திய அமைச்சர் அன்புமணி தங்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி, மாணவிகள் சிலர் நூதன போராட்டம் நடத்தினர்.
இதற்காக கல்லூரி வளாகத்தில் போலித் திருமண நிகழ்ச்சியும் அரங்கேறியது. மருத்துவ மாணவர்கள் அணியும் வழக்கமான உடை அணிந்திருந்த மாணவிகள், ஏராளமான நகைகளையும் அணிந்திருந்தனர்.
இதுகுறித்து மகாராஷ்டிரா மருத்துவ மாணவர்கள் சங்க செய்தித் தொடர்பாளர் அனிருதா பாட்டீல் கூறியதாவது,
மருத்துவ படிப்பை 1 வருடம் நீட்டிப்பதன் மூலம், மாணவிகளின் திருமணம் தாமதப்படுகிறது என்ற சமூக பாதிப்பை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும். மத்திய அரசின் இந்த முடிவு எங்களில் பலருக்கு பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றனர்.












Click it and Unblock the Notifications