குடிக்க மனைவி பணம் தராதால் 'தீக்குளித்த' கணவர்!
சுரண்டை: நெல்லை மாவட்டம், சுரண்டை அருகே குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் கடுப்பான நபர், சாலையில் நின்று தீக்குளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சுரண்டை அருகே உள்ள அழகாபுரி பட்டணத்தை சேர்ந்தவர் மாரியப்பன். உருப்படியாக வேலைக்கு செல்லாமல், பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி வந்தார்.
இது போதாதென்று அவருக்கு குடிப் பழக்கமும் இருந்து வந்தது. தினசரி குடிக்காவிட்டால் அவருக்கு தூக்கமே வராது. குடிப்பதற்கு மனைவியிடமிருந்துதான் வற்புறுத்திப் பணத்தை வாங்கிச் செல்வது வழக்கம்.
2 நாட்களுக்கு முன்பு காலையிலேயே பணம் கேட்டார். ஆனால் மனைவி மறுத்து விட்டார். குடிக்க பணம் தர மனைவி மறுத்து விட்டாளே என்று மனம் உடைந்த மாரியப்பன் வீட்டில் இருந்த மண்ணெய் கேனை தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவந்தார்.
பின்னர் நடுச் சாலையில் நின்று கொண்டு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்து பதறிப் போன அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை தூக்கிக் கொண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.