ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபரை மிரட்டிய கும்பல் கைது
சென்னை: ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபரை மிரட்டிய ரவுடிக் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (35). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் காரில் தனது குழந்தையை பள்ளியில் விட்டு திரும்பும் போது காந்தி மண்டபம் அருகில் 4 பேர் காரை வழிமறித்து காரில் ஏறியுள்ளனர். அவர்கள் 4 பேரும் சுரேஷை கத்தியை காட்டி மிரட்டி, திரிசூலம் அடிவாரத்திற்கு காரை ஓட்டிச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
திரிசூலம் மலையடிவாரத்திற்குள் சென்றவுடன், உனக்கு நம்பிக்கையான ஆளை ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து வரச்சொல். இல்லையென்றால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.
இதனால் பயந்த சுரேஷ், பெட்ரோல் பங்குக்கு போன் செய்து ரூ.1 லட்சம் கொண்டு வரச் சொல்லி கொடுத்த பின்னர் அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ளார். இது தொடர்பாக போலீசிடம் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனால் சுரேஷ் போலீசில் புகார் கொடுக்காமல் இருந்துள்ளார். ஆனால் ரவுடிக் கும்பல் மீண்டும் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இைதயடுத்து சுரேஷ் போலீசில் புகார் செய்தார்.
கமிஷ்னர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைச்ச போலீசார் அதிரடி வேட்டை நடத்தி சுரேஷை மிரட்டிய ராக்கப்பன்(30), வெங்கடேசன்(30), கார்த்திக்(20) ஆகியோரை கைது செய்தனர். தாஸ் என்பவன் தலைமறைவாகிவிட்டான்.
இந்த 3 பேரும் மையிலாப்பூர் பகுதியில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரின் மீதும் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.
இவர்களுக்கு தலைவனாக செயல்பட்ட ராக்கப்பன் ஒரு கொள்ளை வழக்கில் 7 வருடங்கள் சிறை தண்டனை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications