என்.எல்.சி. ஊழியர்கள் குடும்பத்தினர் பிச்சை எடுத்துப் போராட்டம்
கடலூர்: பணியில் இருந்தபோது மரணமடைந்த நெய்வேலி அணல் மின் கழக (என்.எல்.சி.) ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பரிவு அடிப்படையில் பணி வழங்கக் கோரி அந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினர், கடலூர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றி, பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பெரும் வறுமையில் வாடுகின்றன. எனவே ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில், வேலை வழங்க வேண்டும் என்று கடந்த 9 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நூதனப் போராட்டத்தில் தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஈடுபட்டனர். கையில் பிச்சைப் பாத்திரத்துடன் கடலூர் பஸ் நிலையம் வந்த அவர்கள் அங்கு பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து அமைத்துள்ள சங்கத்தின் செயலாளர் ஏ.எஸ்.கண்ணன் போராட்டம் குறித்துக் கூறுகையில், என்.எல்.சி. நிர்வாகம் எங்களை பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளி விட்டது. எங்களுக்கு கருணை அடிப்படையில் வேலை தர என்.எல்.சி. தொடர்ந்து மறுத்தால், நிரந்தரமாகவே நாங்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications