சோனியாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, போலி என்கவுண்டரில் சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி பேசியது குறித்து காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது. இதன் பேரில் மோடியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு மோடி பதிலும் அளித்து விட்டார்.
இந்த நிலையில் மோடியை மரண வியாபாரி என்று பேசிய சோனியா மீதும், இந்துத்துவாவை தீவிரவாதம் என்று விமர்சித்த திக்விஜய் சிங் மீதும் நடவடிக்ைக எடுக்கக் கோரி பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது.
இந்தப் புகாரின் பேரில் தற்போது சோனியா, திக் விஜய் சிங்குக்கும் நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பான முடிவு இன்று மூன்று தேர்தல் ஆணையர்களின் அவசரக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறது என்பதை அனைவருக்கும் எடுத்துக் காட்டும் வகையில் சோனியா, திக்விஜய் சிங்குக்கும் நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் தீர்மானித்ததாக ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, மோடி அளித்துள்ள பதில் கடிதத்தை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகவும், அதன் மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.