மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 62 ஆகிறது!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயரும் எனத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாகலாம்.
முன்பு மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந் நிலையில் மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை கடந்த 1998ம் ஆண்டு மத்திய அரசு 60 ஆக உயர்த்தியது.
இந் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 6வது ஊதியக் கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை 40 சதவீதம் வரை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வரும் மத்திய பட்ஜெட்டில் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிகிறது.
நடப்பு நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கு ரூ. 46,000 கோடியை மத்திய அரசு ஊதியமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.