ஒருதலைக் காதல்: தொழிலதிபரின் மனைவியை கத்தியால் குத்திய என்ஜீனியர் கைது
சென்னை: தான் ஒருதலையாகக் காதலித்த பெண்ணின் தாயை முகமூடி அணிந்து வந்து கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய என்ஜீனியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் விமானங்களுக்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளவர் சுரேஷ் குமார். இவரது மனைவி கல்பனா.
நேற்று காலை சுரேஷ்குமார் நடை பயிற்சிக்காக வெளியே சென்றபோது வீட்டில் கல்பனாவும் குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்த ஒரு நபர் பின்புற காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறிக் குதித்து வீட்டுக்குள் புகுந்தான்.
கல்பனாவிடம் கத்தியை காட்டி, உன் மகள் எங்கே என்று கேட்டுள்ளான். மிரண்டு போன கல்பனா அலறவே அவரை கத்தியால் குத்தினான்.
சத்தம் கேட்டு அவர்களது நாய் ஓடி வந்து அந்த மர்ம நபர் மீது பாய்ந்தது, இதையடுத்து நாயையும் அவன் கத்தியால் குத்தினான்.
காயமடைந்த நிலையிலும் அவனை நாய் தொடர்ந்து தாக்கியது. நிலைமை உணர்ந்த கல்பனாவின் மகள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
கல்பனா கத்திய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வரவே அந்த நபர் தப்பி ஓடிவிட்டான்.
இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், 6 மாதத்துக்கு முன்பு சுரேஷ்குமார் தன்னிடம் வேலை பார்த்து வந்த தேனியைச் சேர்ந்த என்ஜினீயர் பாபு என்பவரை வேலையை விட்டு நீக்கியது தெரியவந்தது. தன் மகள் மீது பாபு ஒரு தலைக் காதல் கொண்டதால் அவரை வேலையை விட்டு தூக்கியதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் பாபுவிடம் விசாரித்தனர். அப்போது அவர்தான் முகமூடி அணிந்து வந்து கல்பனாவை கத்தியால் குத்தியவர் என்று தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications