நான் பிடிவாதக்காரனல்ல-அன்புமணி
தமிழ்வளர்ச்சி கழகத்தின் சித்த மருத்துவ விழாவில் அவர் பேசியதாவது,
சித்த மருத்துவம் மிகவும் பழமை வாய்ந்தது. இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்ய எவ்வளவு நிதி தேவையோ அதை வழங்க தயாராக இருக்கிறேன். சித்த மருத்துவத்தை உலக அளவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மருத்துவத்துறைக்கு 10வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.45,000 கோடி தான் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் 11வது ஐந்தாண்டு திட்டத்துக்கு ரூ.1.36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஓரிரண்டு வாரத்தில் இைத அறிவிக்கவுள்ளார். எனவே மருத்துவ மேம்பாட்டுக்கு நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு முழு சுகாதார, மருத்துவ வசதி கிடைக்க இந்த திட்டம் வழி வகுக்கிறது. செவிலியர்களை புதிதாக நியமனம் செய்கிறோம்.
சுத்தம், சுகாதார குழுக்களை, கிராமங்களில் நியமிக்கவும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் வசதி செய்கிறோம். இதனால் இந்த திட்டம் பிரபலம் ஆகிறது. வெளிநாட்டினரே இதனை பின்பற்றுகிறார்கள்.
ஆனால் இந்த திட்டத்தை நமது நாட்டில் செயல்படுத்த பல்வேறு தடைகள் வருகின்றன. நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் என்பதால் டெல்லியில் எனக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
நான் பிடிவாதக்காரன் அல்ல. ஆனால் நியாயமானவன். மருத்துவ மாணவர்கள் போராட்டம் சரியானது தானா. நீங்களே நியாயம் சொல்லுங்கள். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இப்படிப்பட்ட கட்சிகள் கிராம மக்களின் விரோதிகள் நாடாளுமன்றத்தில் இவர்கள் பேசும்போது கிராமப்புறத்தில் டாக்டர்களே இல்லை என்கிறார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் வெளியே இப்படி பேசுகிறார்கள்.
ஒரு மருத்துவர் பயிற்சி முடித்ததும், முழு மருத்துவர் ஆகி விடுகிறார். அவரைத்தான் ஒரு ஆண்டு கிராமத்தில் பணியாற்ற சொல்கிறோம். அதற்காக ரூ.8,000 ஊதியமும் கொடுக்கிறோம். அதற்காக இவர்கள் கிராமத்தில் தங்கத் தேவையில்லை. தலைநகரத்தில் தங்கி பணியாற்றலாம்.
4 மாதம் ஆரம்ப சுகாதார நிலையம், 4 மாதம் தாலுகா மருத்துவமனை, 4 மாதம் மருத்துவமனை என்று பணியாற்றுவதில் என்ன சிரமம். இதற்கு எத்தனை போராட்டங்கள், சர்ச்சைகள்.
இந்தியாவில் தமிழகம் தான் சுகாதாரத்துறையில் முதலிடத்தில் உள்ளது. அப்படியானால் மற்ற மாநிலங்கள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று பாருங்கள். இதற்காக இந்த திட்டத்தை கொண்டு வருவது பற்றி சொன்னேன்.
முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டபடி இதுகுறித்து கருத்தறிய சாம்பசிவ ராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் 1 மாத காலத்தில் பரிந்துரை அளிக்க உள்ளனர். அதன் பின்னர் தான் இறுதியான முடிவு எடுக்கப்படும். இதனை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்றார் அன்புமணி.