துபாயில் பயணிகளைத் தவிக்க விட்ட ஏர் இந்தியா
துபாய்: துபாயில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் முன்பதிவு செய்த 200 பயணிகளை அந்த விமான நிறுவனம் பல மணி நேரம் தவிக்க விட்டது.
துபாயில் இருந்து நேற்று முன்தினம் (9ம் தேதி) டெல்லிக்கு புறப்பட இருந்த ஏஐ-746 விமானத்தில் செல்ல 200க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்தனர். ஆனால் விமானம் செல்லும் நேரம் தாமதமானது. இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் முறையான அறிவிப்பு ஏதும் தரவில்லை.
தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் எந்த தகவலும் இன்றி தவித்தனர்.
கடைசியில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஏர்இந்தியாவின் அதிகாரி ராமச்சந்திரன் கூறுகையில், பயணிகள் அனைவருக்கும் ஹோட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது என்றார்.
வளைகுடாவில் இருந்து கிளம்பும் பயணிகளில் பலர் தங்களது விசா காலம் முடியும் கடைசி நாளில் கிளம்புவது வழக்கம். அந்த வகையில் இந்த விமானத்தின் கால தாமதத்தால் பல பயணிகளின் விசா காலமே முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
அபுதாபியில் மணவிழா:
அபுதாபியில் 50 காவல்துறையினருக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (United Arab Emirates) தலைநகரான அபுதாபியில் 50 காவல்துறையினர் நேற்று (10ம்தேதி) மாலை ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டனர். அபுதாபி காவல்துறையின் பொன்விழாவையொட்டி இந்த திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமண நிகழ்ச்சியின் போது ஏற்படும் செலவினங்களைக் குறைக்கும் வகையில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய மணவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
துபாயில் 'தம்' அடிக்க தடை
துபாய் நகரில் அடுத்த ஆண்டு முதல் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என துபாய் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
துபாயில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி ஷாப்பிங் வளாகங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், காபி கிளப்கள், இரவு கிளப்கள், பார்கள் உள்ளிட்டவற்றில் புகை பிடிக்கக் கூடாது.
இதுகுறித்து துபாய் நகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு உதவி இயக்குநர் அப்துல்லா ரபீ கூறுகையில், பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
எனவே தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகை பிடிப்போருக்கும், அதை அனுமதிப்போருக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும்.
ஜனவரி மாதம் முதல் இந்த தடை உத்தரவும், அபராதமும் அமலுக்கு வருகிறது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகை பிடிக்காமல் இருப்பதைக் கண்காணிக்கும் வகையில், துபாய் நகராட்சியின் சுகாதாரப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ரோந்து வருவார்கள். மேலும், துபாய் போலீஸாரும் இதற்கு உதவி புரிவார்கள்.
புகை பிடித்துப் பிடிபடுவோர் குறித்த விவரங்கள் கம்ப்யூட்டரில் தொகுக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவார்கள்.
புகை பிடிக்கத் தடை உத்தரவை சரிவர கடைப்பிடிக்காத ஹோட்டல்கள், கிளப்கள், வணிக வளாகங்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், 21 வயதுக்குட்பட்டவர்கள் புகை பிடிக்கவும் தடை விதிக்கப்படும் என்றார் ரபீ.












Click it and Unblock the Notifications