இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய வீடுகள்!-கைவிரித்த அரசு!
கரூர்: கரூரில் குடிசை மாற்று வாரிய வீடு இடந்து விழுந்ததில் ஒரு பெண் படுகாயமடைந்தார். ஆனால், வீட்டை பழுது பார்க்கும் செலவு அந்தந்த வீடுகளில் வசிப்பவரையே சாரும் என அதிகாரிகள் கூறிவிட்டனர்.
கரூர்-திருச்சி சாலையில் குழந்தானூர் அருகே தமிழக அரசின் குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் இதில் 112 வீடுகள் உள்ளன.
இதில் மேல் மாடி பகுதியில் டெய்லாரக வேலை செய்யும் ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ரவிச்சந்திரன் மனைவி வானதி 4 மாத கர்பிணியாக உள்ளார்.
சில நாட்களுக்கு முன் இவர் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது மேலே உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் கதவு ஸ்லாப் திடீரென இடிந்து விழுந்தது. அது நேராக வானதி தலையில் விழுந்ததால் அவர் படுகாயமடைந்தார்.
அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பசுபதிபாளையம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
படுகாயமடைந்த வானதியை கரூர் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.
இந் நிலையில் திருச்சி கோட்ட பொறியாளர் ராமசாமி வெளிட்டுள்ள அறிக்கையில், குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த 94-95ம் ஆண்டுகளில் இந்த வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.
தவணை முறை விற்பனை திட்டத்தின் கீழ் வீடு அவர்களுக்கே சொந்தமாகும். மாத தவணை ரூ. 150 கட்ட வேண்டும். இந்த தொகையை அவர்கள் 20 ஆண்டுகளில் செலுத்த வேண்டும். பிறகு குடிருந்தவர்களுக்கு வீடு சொந்தமாகும். பராமரிப்பு பணியை ஒதுக்கீடுதாரர்கள் தங்களுக்குள் குழு அமைத்து பராமரித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.