இன்று நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தடுத்து சண்டையிட்டபோது உயிரிழந்த 6 பாதுகாப்புப் படையினருக்கும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். பிரதமர் உள்ளிட்ட தலைவர்களைக் கொல்லும் திட்டத்துடன் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்தனர்.
அவர்களை எதிர்த்து டெல்லி போலீஸாரும், மத்திய ரிசர்வ் போலீஸாரும் தீரத்துடன் சண்டையிட்டு தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தனர்.
இந்த சண்டையில் 6 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாடாளுமன்றத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஆனால் அப்சல் குரு தாக்கல் செய்துள்ள கருணை மனு குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளதால் அவரது தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதலில் பலியான 6 பாதுகாப்புப் படையினருக்கும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆறு பேரின் புகைப்படங்களுக்கும் மலர் தூவி தலைவர்கள், எம்.பிக்கள் அஞ்சலி செலுத்தினர். ஆனால் இந்த நிகழ்ச்சியை பலியான 6 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் புறக்கணித்து விட்டனர்.
அப்சல் குருவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தயக்கம் காட்டுவதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த புறக்கணிப்பு முடிவை அவர்கள் எடுத்தனர்.












Click it and Unblock the Notifications