மலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக கனடாவில் பேரணி
ஓட்டாவா: கனடாவின் ஓட்டாவா நகரில், மலேசியத் தமிழர்கள் மீதான அந்நாட்டு அரசின் அடக்குமுறையைக் கண்டித்து அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
ஓட்டாவாவில் உள்ள மலேசியத் தூதரகம் முன்பு புதன்கிழமை நடந்த இந்தப் பேரணியில், டொரண்டோ, மாண்ட்ரீல், ஓட்டாவா நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
அனைத்துல தமிழர் ஒருமைப்பாட்டுக் கழகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள், மலேசியத் தமிழர்களுக்கான தங்களது ஆதரவை தெரிவித்து கோஷம் எழுப்பினர். மேலும், மலேசிய அரசின் அடக்குமுறையைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
மலேசியத் தமிழர்கள் ஏனைய மக்களைப்போல் சமமாக நடத்தப்பட வேண்டும். அங்கு மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். காவற்துறையினர் வன் முறைகளை நிறுத்த வேண்டும் ஆகிய வாசகங்கள் இடம் பெற்ற பதாதைகளைத் தாங்கியவாறு மக்கள் கடும் குளிரிலும் மலேசியத் தூதரகம் முன்பாக நின்றிருந்தனர்.
பின்னர் கோரிக்கை மனு அளிக்க பலமுறை தூதரகத்தை தமிழர்கள் தொடர்பு கொண்டபோதும் அனுமதி மறுக்கப்பட்டது. நேரில் வந்து கொடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த கோரிக்கை மனு தபால் மூலம் மலேசியத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கனடா நாட்டு வெளிநாட்டு செயலகம், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றுக்கும் அதன் பிரதிகள் அனுப்பப்பட்டன.
பேரணியில் கலந்து கொண்ட அரசியலாளர் சாமி அப்பாத்துரை கலந்து அனைவருக்கும் நன்றி கூறினார். பல வணிக நிறுவனங்களும் இந்தப் பேரணிக்கு ஆதரவுவும், உதவிகளும் செய்திருந்தன.
இது ஒரு அடையாளப் பேரணிதான். உலகத் தமிழர்கள் இன உணர்வால் ஒருமைப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொல்கின்ற சிறு நிகழ்வே இது. மலேசியத் தமிழர் மீது அடக்குமுறைகள் தொடருமானால், இதுபோன்ற ஆதரவுச் செயற்பாடுகள் தீவிரமடையும் என பேரணி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.