பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 5 மலேசியத் தமிழ் தலைவர்கள் கைது
கோலாலம்பூர்: மலேசிய நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த ஐந்து முக்கிய தலைவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மலாய் இனத்தவர்களுக்கு நிகராக தங்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை அளிக்க வேண்டும் என்று கோரி இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) கோரி வருகிறது. இதுதொடர்பாக கடந்த மாதம் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.
இதையடுத்து ஹிண்ட்ராப் அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையில் மலேசிய அரசு இறங்கியுள்ளது. ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் உதயக்குமார், கணபதி ராவ், வேதமூர்த்தி ஆகியோர் மீது பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் உதயக்குமார் மற்றும் ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த மனோகரன், கங்காதரன், கணபதிராவ், வசந்தகுமார் ஆகியோர் மீது நேற்று உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஐந்து பேரையும் கைது செய்ய மலேசிய பிரதமரும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை வகிப்பவருமான அப்துல்லா அகமது படாவி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து செலாங்கூர், கோலாலம்பூர், செரம்பான் ஆகிய இடங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தத் தகவலை ஹிண்ட்ராப் அமைப்பின் வழக்கறிஞர் சுரேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை காலவரையின்றி, விசாரணையின்றி சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வேதமூர்த்தி தற்போது மலேசியாவில் இல்லை. சமீபத்தில் அவர் இந்தியா வந்திருந்தார். முதல்வர் கருணாநிதி, பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் விளக்கம்
ஐந்து தமிழ் தலைவர்கள் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறுகையில், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மலேசிய குடிமக்கள் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் பாதுகாப்பை மீறிய பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்க மாட்டோம்.
பேச்சு சுதந்திரமா, மக்கள் பாதுகாப்பா என்று கேட்டால் மக்கள் பாதுகாப்புக்குத்தான் நான் முன்னுரிமை தருவேன்.
சுதந்திரம் வேண்டும் என்றால் கூடவே பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். பொற்றுப்பற்ற சுதந்திரத்தை தர முடியாது.
இந்த நடவடிக்கை தொடருமா என்று கேட்டால், அவர்கள் இதுபோல செய்தால், உள்நாட்டுப் பாதுகாப்பு சட்ட நடவடிக்கையும் தொடரும். அவர்கள் நிறுத்தினால், நாங்களும் நிறுத்தி விடுவோம் என்றார் படாவி.
கைது செய்யப்பட்டுள்ள ஐந்து தமிழர்களுக்கும் முதலில் 60 நாள் சிறைத் தண்டனை அளிக்கப்படும். அதன் பின்னர் சிறைக் காவலை எந்தவித விசாரணையும் இன்றி 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இதை நீதிமன்றங்களுக்குச் செல்லாமல், உள்துறை பாதுகாப்பு அமைச்சகமே செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.