நிறைவேறியது இலங்கை பட்ஜெட் - தப்பியது ராஜபக்சே அரசு
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2008ம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேறியது. இதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், ஆட்சி கவிழுமோ என்ற பரபரப்பு முடிவுக்கு வந்தது.
இலங்கையில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆளுங் கூட்டணியில், இடம் பெற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்கட்சி சமீபத்தில் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. மேலும் அந்தக் கட்சியின் சார்பில் அமைச்சர்களாக இருந்தவர்களும் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இதனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்குமா என்பது கேள்விக்குறியானது.
இந்த பின்னணியில் நடந்த பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில், பட்ஜெட்டுக்கு ஆதரவாக 114 வாக்குகள் கிடைத்தன. 67 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
வாக்கெடுப்பின்போது ஆளுங் கூட்டணியில் இடம்பெற்றிருநத ஜனதா விமுக்தி பெரமுணா கட்சியின் 37 உறுப்பினர்களும், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தம்பி அனுரா பண்டாரநாயகேவும் அணி மாறி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
ஒரு வழியாக பட்ஜெட் நிறைவேறியதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என்ற கருத்து வலுப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 166.44 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 139.4 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications