ஆக்கிரமிப்பு நிலங்களை பிரித்து ஏழைகளுக்குத் தர வேண்டும் : சரத்குமார்
சென்னை: தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டியுள்ள நிலங்களை மீட்டு ஏழை, எளிய மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, மின்சார தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களும் இதனால் வேலை இழந்து கஷ்டப்படுகிறார்கள்.
இவற்றையெல்லாம் விட்டு விட்டு மின் நிலையங்கள் அமைப்பதில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறவினருக்கு பங்கு இருப்பதாக கூட்டணி கட்சியான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியதும், விளைநிலங்களை ஆக்கிரமித்து ராமதாஸ் கல்வி நிலையங்களை கட்டி வருகிறார் என்று ஆற்காடு வீராசாமி ஆதாரங்களை அள்ளி வீசுகிறார்.
எங்கள் பின்னணியை கிளறினால் உங்கள் தவறுகளை முன்னணிக்கு கொண்டு வருவோம் என்பது போல அமைச்சர் ஆவேச அறிக்கை தருகிறார்.
வன்னியர் கல்வி அறக்கட்டளை, விளை நிலங்களை பயன்படுத்தியிருந்தாலும், அது பிற்பட்ட சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்காக பயன்படுகிறது. ஆனால் பல தனியார் அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் என்ற பெயரால் அரசு நிலங்களை ஆக்கிரமித்து இருந்தால், அவற்றை மீட்டு ஏழை, எளிய மக்களுக்கு பட்டாவுடன் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.