அத்வானி ஆட்சிக்கு வந்தால் பொற்காலம், ராகுல் வந்தால் ராகு காலம்: இல.கணேசன்
மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவினர், தங்களது அரசின் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது முந்தைய அரசை மேற்கோள்காட்டி அப்போது நடக்கவில்லையா என்று கூறி தப்பிக்கும் முறையை கையாண்டு வருகிறார்கள்.
அதேபோல தற்போது பாமக நிறுவனர் ராமதாசும் , அவர்கள் செய்யவில்லையா என்று கூறி தப்பிக்க பார்க்கிறார். விளை நிலங்களில் கல்லூரி அமைத்திருப்பதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி குற்றம் சாட்டியது தவறு. கல்லூரி விளை நிலத்தில் கட்டப்படவில்லை என்று உறுதியாக கூற பாமக நிறுவனரும் முன்வரவில்லை. ஆனால் அவர்கள் தவறு செய்திருந்தால் கூட அதே தவறினை திமுகவினரும் செய்ய முன்வரக்கூடாது.
தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி பொய்யான தகவலை கூறினார். அதனை சரிசெய்ய திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
பாமகவினர் திமுகவினர் மீது குறை சொல்லி வருகிறார்கள். திமுகவினர் பாமகவினர் மீது குறைகளை சொல்கிறார்கள். சபாஷ் இது சரியான போட்டி. திமுக அரசு கடந்த ஆட்சியாளர்களில் தவறுகளை கூறாமல், மக்கள் தந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி நல்ல திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் தற்போது வராத நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கூற இயலாது. கூட்டணி பற்றி எந்த கட்சியும் முடிவு செய்யாதபோது நாங்கள் ஏன் அவசரப்பட வேண்டும். தேர்தல் வருவதற்கு முன் கட்சியை பலப்படுத்த மக்கள் மத்தியில் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
வருகிற தேர்தலில் 2 காரணத்திற்காக கூட்டணி அவசியம். பாரத பிரதமராக அத்வானி வர வேண்டும். நாடாளுமன்றத்தில் அத்வானிக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து பாஜக உறுப்பினர்கள் அதிகம் செல்ல கூட்டணி அவசியம். கூட்டணி கண்டிப்பாக வரும். ஆனால் யாருடன் கூட்டணி என்பதை இப்போது கூற இயலாது. கூட்டணி அமைய வேண்டியது கட்டாயம்.
குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது நிச்சயம். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும். காங்கிரஸ் கட்சியில் போட்டிக்கும் வாய்ப்பில்லை, திறமைக்கும் மதிப்பில்லை.
ஆரோக்கிய அரசியல் பாஜகவில் மட்டும் தான் உள்ளது. வாரிசுகளை தலைவர்களாக உருவாக்கி வரும் கட்சிகளுக்கிடையே இது ஆரோக்கியமான விஷயம். நாட்டில் நல்லது நடைபெற வேண்டும் என்று கவலைப்படுகிறோம். அத்வானிதான் பிரதமர் என்பதை இமயம் முதல் குமரி வரை ஏற்றுக் கொண்டுள்ளனர். அத்வானியை பிரதமராக்க சபதம் ஏற்றுக் கடுமையாக உழைப்போம்.
அத்வானியின் ஆட்சிக் காலம் பாரதத்தின் பொற்காலமாக இருக்கும். ராகுல் காந்தியின் ஆட்சி அமைந்தால் ராகு காலமாக இருக்கும் என்றார் இல.கணேசன்.