உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மீட்டர்கள் எரிந்தன
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ராமச்சந்திரபட்டணத்தில் வீடுகளுக்கு செல்லும் மின் கம்பம் மீது உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் 30 வீடுகளில் மின் மீட்டர்கள் எரிந்தன. டிவிக்களும் பழுதடைந்தன.
பாவூர்சத்திரம் அருகே உள்ள ராமச்சந்திரபட்டணத்தில் ஊருக்கு தென்புறம் உள்ள டிரான்ஸ்பார்மர்க்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென்று இன்று காலை அறுந்து விழுந்தது. இந்த கம்பி வீடுகளுக்கு மின்சாரம் செல்லும் கம்பி மீது விழுந்ததால் அந்த பகுதியில் சுமார் 30 வீடுகளில் மின் மீட்டர்கள் வெடித்து எரிந்தது. அத்துடன் பல வீடுகளில் உள்ள டிவிகளும் பழுதடைந்தன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் அறுந்து விழுந்த கம்பிகளை சரி செய்தனர். இதனால் நெல்லை-தென்காசி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், இது போல் 2 முறை நடந்துள்ளது. மின் கம்பத்தில் உள்ள கம்பிகள் முழுமையாக மாற்றப்படாமல் ஆங்காங்கே ஓட்டு போட்டு இணைப்புகள் கொடுக்கப்படுவதால் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
எனவே துண்டு துண்டாக இணைக்கப்பட்டுள்ள மின் கம்பிகளை அகற்றிவிட்டு முழுமையான மின் கம்பி அமைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்வாரியம் இழப்பு எதையும் தருவதில்லை. இந்தப் பிரச்சினைக்கும் முடிவு கட்டுவதில்லை என்று மக்களிடையே பொதுவான அதிருப்தி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications