சென்னையில் துணிகரம்-வீட்டில் புகுந்து கத்தி முனையில் ரூ30 லட்சம், 250 பவுன் கொள்ளை
சென்னை: சென்னையில் இன்று அதிகாலையில் தொழிலதிபரின் வீட்டில் நுழைந்த கும்பல் கத்திகளைக் காட்டி மிரட்டி ரூ.30 லட்சம் பணத்தையும், 250 பவுன் நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளது.
சென்னை கிருகம்பாக்கம் பெருமாள் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் சீனிவாச ரெட்டியார்(58). ஏராளமான நிலங்கள் வைத்துள்ள சீனிவாச ரெட்டியார் குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய அளளவில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி பாய், மகன் கணேசன்.
கணேசன் அப்பகுதியில் கேபிள் டிவி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா.
பிரியா ஆவடியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில் நேற்றிரவு சீனிவாச ரெட்டியார் தனது மனைவி, மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு 2.30 மணியளவில் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. சீனிவாச ரெட்டியார், கணேசனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அந்தக் கும்பல் மிரட்டியது.
வீட்டில் லட்சக் கணக்கில் பணம், நகை இருப்பது எங்களுக்கு நன்றாக தெரியும். எங்களையும் உங்கள் மகன்கள் போல் நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் பணத்தை எடுத்துக் கொள்கிறோம். உங்களுக்கு தான் கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறதே. அதனால் பணம் மற்றும் நகைகளை கொடுத்து விடுங்கள். இல்லாவிட்டால் கழுத்தை வெட்டிவிடுவோம் என்று எந்த பதட்டமும் இல்லாமல் மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து சீனிவாச ரெட்டியார் ஏதும் பேசாமல் பீரோ சாவிகளை எடுத்துக் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பீரோவில் இருந்த ரூ.30 லட்சம் பணம் மற்றும் 250 பவுன் நகைகளை கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்த சூட்கேஸில் அள்ளிப் போட்டுள்ளனர். அதில் இடமில்லாததால் மீதிப் பணத்தை அங்கிருந்த சாக்குப் பையில் கட்டி எடுத்து சென்றுள்ளனர்.
போகும் போது நாங்கள் தெருமுனையை கடக்கும் வரை சத்தம் போடக் கூடாது. சத்தம் போட்டால் நீங்கள் உயிரை இழக்க வேண்டி வரும் என்று எச்சரித்துவிட்டு மிகச் சாதாரணமாக நடந்து சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் போன பின்னர் போலீசாருக்கு தகவல் தந்தார் ரெட்டியார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை நடந்த இடத்திற்கு சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் நாஞ்சில் குமரன் நேரில் பார்வையி்ட்டார்.
இதில், கணேசனின் கேபிள் டிவி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விஜயன் என்பவர் மீது சந்தேகம் வந்ததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனிவாச ரெட்டியாருக்கு பழக்கமான நபரின் துணையோடு தான் இந்தக் கொள்ளை நடந்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொள்ளையர்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் சரளமாக பேசியுள்ளதால், இவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்களா இருக்கலாம் என்றும் தெரிகிறது.
சீனிவாச ரெட்டியாரின் மனைவி லட்சுமி பாய், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்ரபாணி ரெட்டியாரின் தங்கை ஆவார்.












Click it and Unblock the Notifications