முதல்வர் கார் முன்பு பாய்ந்த மர்ம நபர்-திருமங்கலத்தில் பரபரப்பு

நெல்லையில் 2 நாள் நடந்த திமுக இளைஞரணி மாநாடு நேற்று நிறைவடைந்தது. முதல்வர் கருணாநிதி மாநாட்டை முடித்து கொண்டு விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டியில் உள்ள சிமெண்ட் ஆலை கெஸ்ட் ஹவுசுக்கு நேற்றிரவு வந்தார்.
அங்கு தங்கி விட்டு இன்று காலை சென்னை திரும்ப காரில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் சென்று கொண்டிருந்தார்.
திருமங்கலம் பேருந்து நிலையத்தை முதல்வரின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் கடக்கும் நேரத்தில் சாலையோரம் நின்றிருந்து ஒருவர் திடீரென முதல்வரின் கார் முன்பு பாய்ந்தார்.
கத்தையாய் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பேப்பர்கள் அவரது கையில் இருந்தன. கார்கள் அடுத்தடுத்து வேகமாக வந்ததால் பீதியடைந்த அவர் சற்று தடுமாறினார். பின்னர் ஒரமாக ஓடி வந்தார்.
ஆனால், கார்கள் நிறுத்தப்படாமல் சென்றுவிட்டன. அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. ஷாஜகான் மற்றும் போலீசார் அந்த நபரை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரித்தனர்.
அவர் திருமங்கலம் அருகே பன்னிக்குண்டு அம்மாபட்டியை சேர்ந்த பால்சாமி என்பவரின் மகன் ராஜ்குமார் என்று தெரியவந்தது. மதுரை அரசு மருத்துமனைக்கு செல்வதற்காக பஸ் ஏறுவதற்காக திருமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்ததாகக் கூறியுள்ளார்.
அவரிடம் திருமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது சொந்த கிராமத்துககும் போலீசார் சென்று விசாரித்து வருகின்றனர்.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் மதுரை விமான நிலையத்திற்கு முதல்வர் கருணாநிதி காலை 7.30 வந்து சேர்ந்தார். 8.35க்கு புறப்பட்ட பாராமவுண்ட் விமானத்தில் மனைவி தாயாளு அம்மாள், கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் ஆற்காடு வீரசாமி, பொன்முடி ஆகியோருடன் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications