கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு-அரவாணிகள் கோரிக்கை
சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரவாணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவாணிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அரசின் சார்பில் சென்னையில் பொது விசாரணை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அரவாணிகள் கண்ணீர் மல்க கூறியதாவது,
நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கும் சமூக அந்தஸ்து தேவை எனக்கோரி 45 வருடங்களாக போராடி வருகிறோம். இன்றுவரை பலனில்லை. முன்பெல்லாம் எங்களை அலி, பேடி, ஒன்பது, உஸ்லாம் என பலவாறு அழைத்து வந்தனர்.
பல ஆண்டுகள் போராடியதால் 1998ம் ஆண்டு அரவாணி என்ற பெயர் கிடைத்தது. அரவாணி என்றாலே செக்ஸில் ஈடுபடுபவர்கள் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளது.
பள்ளி பருவத்தில் ஏற்படும் மாற்றத்தால் சக மாணவர்கள், குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்குவதால் பள்ளி, வீட்டை விட்டு வெளியேறுகிறோம். எங்கும் வேலை கிடைப்பதில்லை. பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதால் செக்ஸ் தொழிலுக்கு கட்டாயமாக தள்ளப்பட்டு, நோயுண்டு இறக்கிறோம்.
பேருந்தில் கூட ஆண்கள் வரிசையில் அமர்ந்தால் கிண்டல். பெண்கள் வரிசையில் அமர்ந்தால் அருவருப்பான பார்வை. அரவாணிகள் என்றால் யாரும் வாடைக்குக் கூட வீடு தருவதில்லை. ஆயுள் காப்பீடு உள்ளிட்ட எந்த காப்பீடுகளுக்கும் நாங்கள் அருகதை கிடையாது. மருத்துவ வசதி கூட எங்களுக்கு கிடைப்பதில்லை.
வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனை, நாய் போன்றவைகளின் இஷ்டத்தை புரிந்து கொள்ளும் மனிதர்கள் எங்கள் இதய வலியை கண்டுகொள்வதில்லை.
இதற்கு முடிவுகட்ட அரவாணிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி, சிறப்பு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அது போன்ற ஒரு சூழ்நிலையில் தான் அரவாணிகளுக்கு கவுரவமான வாழ்க்கை அமையும் என்றனர்.












Click it and Unblock the Notifications