வட சென்னையில் மீண்டும் வாயுக் கசிவு - மக்கள் பீதி
சென்னை: வட சென்னையில் நேற்று இரவு மீண்டும் வாயுக் கசிவு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
வட சென்னை மற்றும் மத்திய சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம வாயு கசிவு ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணலியில் உள்ள சென்னை பெட்ரோகெமிக்கல் நிறுவனத்திலிருந்து வெளியான ஹைட்ரோகார்பன்கள்தான் இதற்குக் காரணம் என்பது பின்னர் தெரிய வந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மர்ம வாயு கசிவு நுகரப்பட்டது. இதை நுகர்ந்த பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி நிலவியது.
இதுகுறித்து விசாரணையில் இறங்கிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நுகரப்பட்டது விஷ வாயு அல்ல, சென்னை பெட்ரோககெமிக்கல் நிறுவனத்திலிருந்து வெளியான ஹைட்ரோகார்பன்கள்தான் என்று விளக்கினர். அந்த ஆலையில் நடந்த சுத்தப்படுத்தும் பணியின்போது இவை வெளியாயின. இதையடுத்து சுத்தப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டு ஹைட்ரோ கார்பன் வெளியாவது தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் வட சென்னையில் உள்ள வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர், எருக்கஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு வாயுக் கசிவு இருந்ததாகவும், இதனால் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் கூறினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications