இலங்கைக்கு ராணுவ உதவி கூடாது - பிரதமருக்கு வைகோ கடிதம்
சென்னை: இலங்கைக்கு எக்காரணம் கொண்டும் ராணுவ ரீதியிலான உதவிகளை இந்திய அரசு அளிக்கக் கூடாது. தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் போருக்கு இந்தியா எந்தவிதமான ஆலோசனைகளையும் கூறக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் இலங்கை அரசுடன் கை கோர்த்துக் கொண்டு, மத்திய அரசுக்குத் தவறான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கூறி வருகின்றனர்.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆயுத உதவிகளையும், பிற போர் உத்தி உபாயங்களையும், ராணுவ உதவிகளையும் அளித்து வருமானால், அது தமிழ் மக்கள் மனதில் நீங்காத கோபத்தையும், விரக்தியையும், துவேஷத்தையும் ஏற்படுத்தவே வழி வகுக்கும்.
இலங்கையில் உள்ள ஒவ்வொரு தமிழனும் சிந்தும் ரத்தத்திற்கும், ஒவ்வொரு தமிழனின் உயிரிழப்புக்கும் இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் போரில், இலங்கை அரசுக்கு ஆலோசனைகள் கூற இந்தியாவிலிருந்து பாதுகாப்பு துறை நிபுணர்கள் கொண்ட குழு இலங்கை சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை கண்டித்து மிகுந்த வேதனையுடனும், துயரத்துடனும் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications