எல்.டி.டி.இ ஆதரவு வேண்டாம்: திருமா.வுக்கு காங்கிரஸ் கோரிக்கை
சென்னை: விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு தருவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, திருமாவளவனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணசாமி கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவு தருவதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார் திருமாவளவன். அதை ஏற்க முடியாது.
ராஜீவ் காந்தியைக் கொன்ற ஒரு இயக்கத்திற்கு, அந்த இயக்கத்தின் தலைவர் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இயக்கத்திற்கு எப்படி தார்மீக அடிப்படையில் ஆதரவு தர முடியும்?
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. எனவே அந்த அமைப்புக்கு எந்த வகையில் ஆதரவு அளித்தாலும் அது சட்டவிரோதம்தான்.
மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு தார்மீக ஆதரவு அளிக்க முடியுமா. அப்படிச் செய்வது மகாத்மா காந்தி கொலையை நியாயப்படுத்தாது என்று கூற முடியுமா.
விடுதலைப் புலிகளுக்கு தெரிவித்து வரும் ஆதரவை திருமாவளவன் கைவிட வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார். எனவே இதுபோன்ற கருத்துக்களைக் கூறி தமிழக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்று அக்கட்சியைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications