சலாஹூதீனுக்கு துபாய் ஈமான் அமைப்பு வாழ்த்தரங்கம்
துபாய்: மத்திய கிழக்கு ஆசிய வளர்ச்சிக்கு உதவிய சிறந்த தொழிலதிபருக்கான விருது பெற்ற ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சையத் எம்.சலாஹூதீனுக்கு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் வாழ்த்தரங்கம் நடந்தது.
மேரியாட் ஹோட்டலில் நடந்த இந்த விழாவில் ஈமான் அமைப்பின் விழாக் குழு செயலாளர் காயல் யஹ்யா முஹய்தீன் இறை வசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாகத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துல் ரஹ்மான் ஈமான் அமைப்பு மேற்கொண்டுவரும் சமூக மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவரித்தார்.
துபாய்க்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி பி.எஸ். முபாரக் பேசுகையில், சலாஹூதீன் அவர்கள் பரபரப்பு மிகுந்த துபாயில் அமைதியான மனதுடன் ஒரு இளைஞரைப் போன்று தொழில் மற்றும் சமூக சேவையில் சாதனை படைத்து வருகிறார் என்றார்.
ஈமான் அமைப்பின் கல்விக்குழுத் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா, அபுதாபி அய்மான் சங்கத்தின் ஹமீதுர் ரஹ்மான், உலக தமிழ்ப் பண்பாட்டுக்கழக் நிர்வாகி முனைவர் ரபியுத்தீன், நம்ம ஊரு செய்தி ஆசிரியர் முனைவர் அ.அயூப், சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன்,
ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம், துபாய் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பெண்கள் சங்கம், அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை, தாய்மண் சர்வதேச அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் சலாஹூதீன் பேசுகையில், தனக்கு இத்தகைய விருது கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.
விழா நிகழ்ச்சியினை ஈமான் அமைப்பின் கல்விக்குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அப்துல் கத்தீம், அஷ்ரப் அலி, மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், இஸ்மாயில் ஹாஜியார், ரமேஷ், பிரசன்னா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications