கல்விக்கான நிதி ஒதுக்கீடு 19% உயர்த்தப்படும்-பிரதமர்
டெல்லி: ஏழைகளுக்கு அளிக்கப்படும் உணவு தானியங்கள் தவறாக பயன்படுத்துவதை மாநிலங்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார்.
இன்று அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை பிரதமர் துவக்கி வைத்து பேசியதாவது,
சர்வேதச அளவில் நுகர் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே போகின்றன. இதில் நாம் கவனக்குறைவாக இருக்க முடியாது. சுய தேவையை பூர்த்தி செய்ய அதிகளவில் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உணவு தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் இருப்பு அதிகரிக்க வேண்டும்.
குறைந்த காலத்துக்குள் உணவு தானிய கொள்முதலை அதிகரிக்க வேண்டும். ஏழைகளுக்கு அளிக்கப்படும் உணவு தானியங்கள் தேவையானவர்களுக்கும் உரிய ஏழைகளுக்கும் போய்ச் சேருகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அது வேறு வழிகளில் தவறாக பயன்படுத்துவதை மாநிலங்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருகிறது. நமது பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
இந்தியா 11வது திட்டத்துக்குள் அடியெடுத்து வைக்கிறது. கல்வி வளர்ச்சியில் அரசு அதிக கவனம் செலுத்துவதால், 11வது திட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கான நிதி 19 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது என்றார்.
பிரதமர் திட்டத்துக்கு மோடி எதிர்ப்பு:
சிறுபான்மையினர் நலனுக்காக பிரதமர் பரிந்துரைத்துள்ள 15 அம்ச திட்டத்தை ஐந்து ஆண்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் யோசனைக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த 54வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி பேசுகையில், சிறுபான்மையினருக்கென பிரதமர் பரிந்துரைத்துள்ள புதிய 15 அம்சத் திட்டம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டியதாகும்.
இது நாட்டின் சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையிலானது. எனவே இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் மோடி.