இளங்கோவன் கொடும்பாவியை எரித்த விடுதலை சிறுத்தைகள்
கரூர்: கரூரில் மத்திய இணையமைச்சர் இளங்கோவனின் உருவ பொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
சமீபத்தில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் திருமாவளவனாக இருந்தாலும் சரி, பெருமாவளவனாக இருந்தாலும் சரி. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இளங்கோவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்த கரூர் பேருந்து நிலையம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். பிற்பகல் 12.25 மணியளவில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் அகரமுத்து தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
தடையை மீறி ஊர்வலம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். அப்போது மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேர் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் உருவ பொம்மை எரித்ததற்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.