மதிமுக, தேமுதிக துணையுடன் நகராட்சி து. தலைவர் பதவியைப் பிடித்த திமுக
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி துணைத் தலைவர் தேர்தலில் மதிமுக, தேமுதிக, சுயேச்சைகள் உள்ளிட்டோரின் ஆதரவுடன் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலை அதிமுக புறக்கணித்தது.
செங்கல்பட்டு நகராட்சித் துணைத் தலைவராக இருந்தவர் குமார் என்கிற குரங்கு குமார். கடந்த மாதம் 17ம் தேதி இவரும், இவருடைய நண்பரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் நேற்று நடந்தது. ஆனால் இத்தேர்தலை புறக்கணிக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து அதிமுகவினர் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் தேர்தலைப் புறக்கணித்தனர்.
அதிமுகவுக்கு செங்கல்பட்டு நகராட்சியில் தலைவர் உள்பட 10 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் திமுக சார்பில் கிரிபாபு நாயுடு என்பவர் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. திமுக வேட்பாளருக்கு மதிமுக (1), தேமுதிக (2), சுயேச்சைகள் (3) ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து கிரிபாபு நாயுடு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நகராட்சிக்கு நடந்த தேர்தலுக்குப் பின்னர் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு அளித்த மதிமுக, தேமுதிக, சுயேச்சைகள் இந்த முறை திமுகவுக்கு ஆதரவு கொடுத்து கலக்கி விட்டனர்.
கடந்த 11 வருடங்களாக துணைத் தலைவர் பதவியில் அதிமுகவினர்தான் இருந்து வந்தனர். முதல் முறையாக திமுக இப்பதவியைக் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.