For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போன் கொள்ளையர்களை விரட்டி பிடித்த காவலாளி

By Staff
Google Oneindia Tamil News


தூத்துக்குடி: தூத்துக்குடியில் செல்போன் ஷோரூமில் கொள்ளையடித்த திருடர்களை காவலாளியும், வாலிபர் ஒருவரும் விரட்டி பிடித்தனர்.

தூத்துக்குடி மீக தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் பாண்டியராஜன். இவர் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நோக்கியா செல்போன் ஷோரூம் வைத்துள்ளார். இங்கு கேமரா செல்போன்கள் உட்பட நூற்றுக்கணக்கான செல்போன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பாண்டியராஜன் நேற்றிரவு 10 மணிக்கு தனது கடையை பூட்டிவிட்டு கிளம்பினார். அப்போது பக்கத்து கடை முன்பு வடநாட்டைச் சேர்ந்த 2 பேர் கம்பளி போர்வை விற்பவர்கள் போல் நின்று கொண்டிருந்தனர். இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த பாண்டியராஜன் கடையின் காவலாளி முத்து வீராவிடம் கவனமாக இருக்குமாறு கூறி விட்டு சென்றார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் காவலாளி முத்து வீரா வணிக வளாகத்தின் மாடிக்கு சென்றார். இதை மறைந்திருந்த கவனித்த 8 பேர் கொண்ட கும்பல் செல்போன் ஷோரூமின் கதவை உடைத்து விலை உயர்ந்த செல்போன்களை பைகளில் அள்ளிக் கொண்டு வெளியேறினர்.

அந்த நேரம் மாடியிலிருந்து கீழே இறங்கிய முத்துவீரா இதைப் பார்த்து திருடன்...திருடன்... என சத்தம் போட்டார். உடனே அந்த கும்பல் திருடிய செல்போன்களுடன் ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை துரத்திக் கொண்டு முத்துவீராவும் ஓடினார். அப்போது எதிரே பைக்கில் வந்த தனியார் நிறுவன ஊழியர் பிரபாவுடன் முத்து வீரா சேர்ந்து கொள்ளையர்களை விரட்டினர்.

கொள்ளையர்களை துரத்திய அவர்கள் பாலவிநாயகர் கோவில் தெருவில் ஓடிய ஒருவனை மடக்கி பிடித்தனர். அவனை அப்பகுதியில் இருந்த வாட்ச்மேன் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு மற்றொரு கொள்ளையனை துரத்தினர்.

அதன் பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகே சுவர் ஏறி குதித்த இன்னொரு கொள்ளையனையும் மடக்கி பிடித்தனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பழனிசாமி ஆகியோர் வந்து பிடிபட்ட செல்போன் கொள்ளையர்கள் இருவரையும் பிடித்து சென்று விசாரணை நடத்தி அவர்களிடமிருந்து ரூ.1.78 லட்சம் மதிப்புள்ள 42 விலை உயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ்குமார், ஷோட்டலால் பிரசாத் என்று தெரிய வந்தது. கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள வசந்த அன்கோ, சத்யா ஏஜென்சியில் நூதனமான முறையில் நூற்றுக்கனக்கான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திலும் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X