பெரு வெள்ளம் - அபாயத்தில் அமராவதி பாலம்
கரூர்:கடும் மழை காரணமாக இடியும் அபாயத்தில் கரூர் அமராவதி பாலம் உள்ளது.
கரூரில் அமராவதி நதியின் குறுக்கே பாலம் கட்ட 1998 ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக அரசு அனுமதி அளித்ததது. இதற்கான ஒப்பந்தம் இசிசிஐ என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ரூ 13 கோடியில் கட்டுமான பணிகள் முடிந்து 2000ம் ஆண்டு இப் பாலம் திறக்கப்பட்டது.
அமராவதி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் புதிய பாலம் 2005ம் ஆண்டு நவம்பர் 24 ம்தேதி பழுதடைந்தது. இதையடுத்து பாலம் கட்டுமானத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அது குறித்து விசாரிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டார்.
2005ல் பாலத்தை பார்வையிட்ட நிபுணர்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் பால பராமரிப்பை டிச 19 ம் தேதி அரசே ஏற்று சுங்கவரியை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் பாலம் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சி துறை அமைச்சர் கோசி மணி மற்றும் உயர் அதிகாரிகள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கரூர் நீதி மன்றத்தில் நடந்தது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் அளித்த அறிக்கையின் படி அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கன மழையால் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுகின்றது. ஆற்றங்கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் வெள்ள நீர் ஆற்றில் வேகமாக வருவதால் அமராவதி பாலத்தில் செல்ல இரவில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் பகல் நேரத்தில் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் பொது மக்கள் அந்த பாலத்தில் செல்வதா வேண்டாமா என குழம்பிப் போய் உள்ளனர்.
மேலும் வெள்ள நீரால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அருகில் உள்ள பல கிராமங்கள் கடும் சோதனையை சந்திக்க நேரிடும். ஏற்கனவே இதே போன்ற மழை காரணமாகத்தான் அமராவதி பாலம் சேதமானது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் அமராவதி பாலததை சீர் செய்யவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.