மாயா வெங்கடேசனின் நிலங்களை- சிபிசிஐடி போலீசார் ஆய்வு
நெல்லை: பண மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள மாயா வெங்கடேசனின் நிலங்களை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.
சென்னையை சேர்ந்த மாயா வெங்கடேசன், சிமெண்ட் தொழிற்சாலை துவங்கப் போவதாகவும், அதை கட்டுவதற்கு டெண்டர் விட்டு அதன்படி பல கட்டட காண்ட்ராக்டர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்தார்.
இதையடுத்து அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரால் பாதிக்கப்பட்ட கட்டட காண்ட்ராக்டர்கள் ஏராளமானோர் போலீசில் புகார் செய்தனர். மாயா வெங்கடேசனுக்கு நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் ஏராளமாக நிலங்கள் அவர் பெயரில் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மாயா மீதுள்ள அனைத்து வழக்குகளையும் சென்னையிலுள்ள சிறப்பு புனலாய்வுப் பிரிவை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னையிலிருந்து சிபிசிஐடி டிஎஸ்பி ஒருவர் தலைமையில் போலீசார் மற்றும் பொறியாளர்கள் கடந்த 2 நாட்களாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மாயா வெங்கடேசனின் நிலங்கள் மற்றும் அவற்றின் மதிப்புகளை ஆய்வு செய்தனர்.
இது தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாயா வெங்கடேசன் பெயரில் நிலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.