வெள்ளப் பகுதிகளில் கருணாநிதி ஆய்வு
சென்னை: சென்னை அருகே வெள்ளத்தால் உடைந்த காரனோடை பாலத்தை முதல்வர் கருணாநிதி இன்று பார்வையிட்டார். மேலும் மீஞ்சூர், பழவேற்காடு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்களையும் அவர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
சமீபத்தில் பெய்த கன மழையால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்துள்ளன. 52 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோருக்கு ெபரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரனோடை பாலம் சமீபத்திய வெள்ளத்தால் உடைந்தது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை இன்று காலை முதல்வர் கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேத விவரம் குறித்தும், போக்குவரத்துக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பழவேற்காடு, மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மழையால் பாதிக்கப்பட்ட வயல்களைப் பார்வையிட்டார். பிறகு விவசாயிகளிடம் சேத விவரம் குறித்து கேட்டறிந்தார். உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications