'கடத்த' விமானம் கிடைக்காமல் தவித்த அதிகாரிகள்!
கோவை: கோவை விமான நிலையத்தில் விமானக் கடத்தல் ஒத்திகைக்காக விமானம் கேட்டு, எந்த நிறுவனமும் விமானம் தர முன்வராததால், கடைசியில் பஸ் ஒன்றைக் கொண்டு வந்து கடத்தல் ஒத்திகையை நடத்தினர்.
கோவை விமான நிலையத்தில், கோவை காவல்துறையின் விமானக் கடத்தல் தடுப்பு கமிட்டியின் சார்பில் விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகையை இன்று நடத்தத் தீர்மானித்தனர். காலை 11 மணிக்கு இந்த ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒத்திகை நிகழ்ச்சிக்கு விமானம் தர தனியார் விமான நிறுவனங்கள், இந்தியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனால் விமானம் கிடைக்காமல் அதிகாரிகள் குழம்பி விட்டனர்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் ஒரு பஸ்சைப் பிடித்துக் கொண்டு வந்து அதை வைத்து கடத்தல் ஒத்திகை நிழ்ச்சியை நடத்தினர்.
முன்னதாக, கடத்தல் தடுப்பு கமிட்டியின் தலைவரும், கோவை மாநகர காவல்துறை ஆணையருமான காந்திராஜன், விமான நிலையத்திற்கு, ஒத்திகை நிகழ்ச்சியைப் பார்க்க வந்தபோது அவரை உள்ளே விட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் காந்திராஜன், நான் போலீஸ் கமிஷனர், ஒத்திகை நிழ்ச்சியைப் பார்க்க வந்ததாக விளக்கினார். ஆனாலும் பாதுகாப்புப் படையினர் அவரை அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் உதவி போலீஸ் ஆணையர் சண்முகப் பிரியா தலையிட்டு, பாதுகாப்புப் படையினரிடம் விளக்கிய பிறகே கமிஷனரை உள்ளே விட்டனர்.
இன்று காலை நடந்த இந்தக் குழப்பத்தால் கோவை விமான நிலையத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications