பாஜக அமோக வெற்றி - 3வது முறையாக முதல்வராகிறார் மோடி

குஜராத் சட்டசபையின் 182 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
37 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 41 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இதுதவிர பகுஜன் சமாஜ் கட்சி முதல் முறையாக குஜராத் தேர்தலில் போட்டியிட்டது.
182 தொகுதிகளிலும் 1268 வேட்பாளர்கள் களம் கண்டனர். டிசம்பர் 11ம் தேதி 87 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்தது. 2வது கட்டமாக மீதமுள்ள 95 தொகுதிகளுக்கும் டிசம்பர் 16ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. இரு கட்டத் தேர்தலிலும் 60 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.
பாஜக 182 தொகுதிகளிலும் போட்டியிட்டது. காங்கிரஸ் 172 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 166 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களில் முன்னணி நிலவரம் தெரிய வந்தது. பிற்பகலுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகின.
மோடி வெற்றி:
மணிநகர் தொகுதியில் முதல்வர் நரேந்திர மோடி அபார வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான தின்ஷா படேலை விட 87 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் மோடி.
இறுதி நிலவரப்படி மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜகவுக்கு 117 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கூட்டிக்கு 62 தொகுதிகள் கிடைத்தன. மற்ற வேட்பாளர்கள் 3 இடங்களில் வென்றனர்.
இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார் மோடி.
6 அமைச்சர்கள் தோல்வி:
மோடி அலையில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்ற நிலையிலும், 6 அமைச்சர்களுக்கு தோல்வி கிடைத்துள்ளது.
மோடியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும், அவருக்கு நெருக்கமானவருமான அமைச்சர் இந்திரவிஜய் சிங் கிஷோர் சிங் ஜடேஜா தங்கதரா தொகுதியில் தோல்வி அடைந்தார்.
மின்துறை அமைச்சர் செளரவ் படேல், விவசாய அமைச்சர் பூபேந்தர் சிங் செளடாஸ்மா, வருவாய் அமைச்சர் கெளசிக் படேல் ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.
இதேபோல அமைச்சர்கள் ரதிலால் சுரேஜா, பிரபாத் சிங் செளகான் ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.
முக்கிய தொகுதியான கோத்ராவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சொராபுதீனை கொன்று சரியானதே என்று மோடி பரபரப்பாக பேசிய மாங்க்ரோல் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது.
பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாஜகவினர் பெரும் உற்சாகத்துடன் அதைக் கொண்டாடி வருகின்றனர். பட்டாசுள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பரபரப்பான தேர்தல் களம்:
குஜராத் மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. காரணம், கோத்ரா வன்முறை, நரேந்திர மோடியின் விஸ்வரூப வளர்ச்சி, அவரது வளர்ச்சித் திட்டங்களுக்கு மக்களிடையே காணப்படும் ஆதரவு உள்ளிட்டவை குறித்து மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்த உரைகல்லாக இந்த தேர்தல் முடிவுகள் பார்க்கப்பட்டன.
நரேந்திர மோடி மாநிலத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் படு தீவிரமாக பிரசாரம் செய்தார். முழுக்க முழுக்க இது மோடியின் தேர்தலாகவே அமைந்தது எனலாம். அந்த அளவுக்கு மோடி குஜராத் முழுவதும் ஆக்கிரமித்திருந்தார்.
காங்கிரஸ் கூட்டணிக்காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும், கட்சிப் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
மோடியின் பிரசாரம் முழுக்க முழுக்க இந்துத்வாவை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டது. அணல் பறந்த பிரசாரத்தின்போது, மோடியை மரண வியாபாரி என்று சோனியா காந்தி வர்ணிக்கப் போக, சொராபுதீன் படுகொலையை நியாயப்படுத்தி மோடி பதிலளிக்க பெரும் பரபரப்பானது குஜராத் தேர்தல் களம்.
கோத்ரா வன்முறை, முஸ்லீம்கள் படுகொலை, சொராபுதீன் உள்ளிட்ட பல அப்பாவி முஸ்லீம்களை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்தது உள்ளிட்ட பரபரப்புகள் ஏற்பட்டபோதிலும் மோடியை அது ஒன்றும் செய்யவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
இவற்றையும் மீறி, குஜராத் மாநிலத்தில் மோடி அரசு மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் மனதில் வியாபித்துள்ளன என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் (எக்சிட் போல்) மோடி தலைமையில் மீண்டும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிய வந்தது. தற்போதைய தேர்தல் முடிவுகள் அதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன.
குஜராத் தேர்தல் களம் - ஒரு பின்னோட்டம்
மொத்த இடம் - 182
களம் கண்ட வேட்பாளர்கள் - 1268
வாக்குப் பதிவு சதவீதம் - 59.75%
வாக்குச் சாவடிகள்- 40,468
பாஜக போட்டியிட்ட இடங்கள் - 182
காங்கிரஸ் -172
பகுஜன் சமாஜ் கட்சி - 166
சுயேச்சைகள் - 480
காங்கிரஸ் சீட்டில் போட்டியிட்ட பாஜக அதிருப்தியாளர்கள் - 7.
மன்மோகன் சிங் வாழ்த்து:
தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற செய்தி வர ஆரம்பித்ததும்,முதல்வர் நரேந்திர மோடிக்கு பிரதமர் மன்மோகன் சிங்,தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications