குஜராத் வெற்றி: தேசிய அளவில் மாற்றம் வரும் - அத்வானி

குஜராத் வெற்றி குறித்து அவர் கூறுகையில், இந்திய ஜனநாயகத்தில் இது மிகப் பெரும் திருப்புமுனையாகும். பாஜக மீது குஜராத் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
இத்தகைய பெரும் வெற்றியைக் கொடுத்த குஜராத் மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
2002ம் ஆண்டு பாஜக வென்றபோது, அதை கோத்ரா ரயில் எரிப்பால் கிடைத்த வெற்றி என்று சிலர் விமர்சித்தனர். ஆனால் அது உண்மையல்ல.
இப்போது கிடைத்துள்ள வெற்றியின் மூலம், நல்லாட்சிக்கும், வளர்ச்சிக்கும், நல்ல தலைமைக்கும் மக்கள் வாக்களித்துள்ளது நிரூபணமாகியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக குறித்து அவதூறான பிரசாரத்தில் ஈடுபட்டது காங்கிரஸ். மோடிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் அவதூறுகளை அள்ளி வீசி பிரசாரம் செய்தனர். ஆனால் அதையும் மீறி மக்கள் பாஜகவுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளனர்.
1971ம் ஆண்டு நந்த லோக்சபா தேர்தலில் இந்திரா காந்திக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் திரண்டு ஓரணியில் நின்றன. ஆனால் இந்திரா காந்தி அதை சாதுரியமாக சமாளித்து அந்த கூட்டணியை உடைத்து வெற்றியைக் கைப்பற்றினார். அதேபோலத்தான் இப்போது குஜராத்திலும் நடந்துள்ளது.
இந்திய அரசியலுக்கு பல பாடங்களை இந்தத் தேர்தல் கற்றுக் கொடுத்துள்ளது. நல்லாட்சி கொடுத்து நல்ல அரசியலை நடத்த முடியாது என்ற கருத்து தவிடு பொடியாகியுள்ளது. அந்தக் கருத்தை உடைத்து வெற்றி பெற்றுள்ளார் மோடி. அரசியல் ரீதியாக மட்டுமன்றி, வளர்ச்சித் திட்டங்கள் வாயிலாகவும் வெற்றி பெற்றுள்ளார் மோடி.
ஜாதி உணர்வுகளையும், மத உணர்வுகளையும் தூண்டாமலேயே கூட வெற்றி பெற முடியும் என்பதை பாஜக நிரூபித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி செய்தது போல, வாக்காளர்களை மிரட்டியோ, பயமுறுத்தியோ, அனுதாபம் தேடியோ குஜராத்தில் பாஜக வெற்றி பெறவில்லை.
எதிர்மறையான பிரசாரம், அடக்குமுறை, அராஜகம், அவதூறுப் பிரசாரம் ஆகியவற்றுக்கு எதிரான வெற்றி இது.
கடந்த 60 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், மோடியைப் போல எந்தத் தலைவரும் அவமானப்படுத்தப்படவில்லை, அவதூறாக விமர்சிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் அத்வானி.
கொள்கைக்குக் கிடைத்த வெற்றி: ராஜ்நாத்
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி, கட்சியின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
குஜராத் சட்டசபைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூடி இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் லட்டு கொடுக்கப்பட்டது.
பின்னர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத்தில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள வெற்றி கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
குஜராத்தை முன்மாதிரி மாநிலமாக மோடி மாற்றியுள்ளார். மக்கள் நலத் திட்டங்களையும், மக்களுக்கான திட்டங்களையும் பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதை குஜராத்தில் பாஜக பெற்றுள்ள இந்த நான்காவது தொடர் வெற்றி நிரூபித்துள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.












Click it and Unblock the Notifications