மதுரையில் அதிமுக-தேமுதிகவினர் அடிதடி, போலீஸ் தடியடி
மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற அதிமுக-தேமுதிகவினருக்கிடையில் கடும் மோதல் ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவு தினமான இன்று பல்வேறு கட்சியினரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தனர்.
மதுரையில் கே.கே.நகர் பகுதியில் நீதிமன்றம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க இன்று காலையில் அதிமுகவினர் ஏராளமானோர் வந்தனர். அப்போது அங்கு தேமுதிகவினரும் வந்தனர்.
அப்போது அதிமுக-தேமுதிகவினருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் சிறிது நேரத்தில் கை கலப்பானது. ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி அடித்துக் கொண்டனர். இதில் பலரது வேட்டி, சட்டைகள் கிழிந்தன.
கற்களையும் கட்டைகளையும் கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் ஜெயலலிதா பேரவையின் செயலாளர் அண்ணாதுரையின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது.
இதையடுத்து அதிமுகவினர் பயங்கர தாக்குதலில் இறங்கினர். இந்தத் தாக்குதலை சமாளிக்க முடியாத தேமுதிகவினர் உடனே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தல்லாகுளம் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினரை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்களோ, எங்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினரை கைது செய்தால் தான் மறியலை கைவிடுவோம் என்று கூறினர்.
இதையடுத்து தேமுதிகவினர் மீது சரமாரியாக தடியடி நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 60 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனால் நீதிமன்றம் அமைந்துள்ள அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications