தேசிய அரசியலில் மோடி? - வெங்கையா விளக்கம்
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேசிய அரசியலுக்கு வரமாட்டார். அவரை இந்த நேரத்தில் தேசிய அரசியலுக்கு இழுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கட்சியின் மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத்தில் மக்கள் காங்கிரசை தோற்கடித்துள்ளனர். இதை காங்கிரஸ் ஏற்க மறுக்கிறது. தோல்வி குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி கூறும்போது ஹிட்லர் ஜெயித்து விட்டார் எனக் கூறியுள்ளார்.
குஜராத் மக்கள் காங்கிரசை வீழ்த்தியிருக்கிறார்கள் என்பதை ஏன் மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை. பாஜக இந்தளவு வெற்றி பெற்றிருப்பதற்கு பாஜக தொண்டர்களின் சிறப்பான தேர்தல் பணி தான் காரணம்.
மோடி தேசிய அரசியலுக்கு இப்போது வரமாட்டார். அவரை இந்த நேரத்தில் தேசிய அரசியலுக்கு இழுக்கும் திட்டம் எதுவும் பாஜகவுக்கு இல்லை. மோடி பாரதீய ஜனதாவில் மக்களை கவர்ந்த தலைவர்களில் ஒருவராகி உள்ளார்.
குஜராத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்காக அவர் கட்சியால் அனுப்பப்பட்டிருக்கிறார். அவருக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். இந்த பணி எப்போது முடிகிறதோ அப்போது அவரை தேசிய அரசியலுக்கு அழைப்பதா, இல்லையா என்பது பற்றி முடிவு எடுப்போம் என்றார்.