மணல் அள்ள எதிர்ப்பு - போலீஸ் - பொதுமக்கள் மோதல்
விருதுநகர்: விருதநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மணல் அள்ள பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி மணல் எடுக்க முயன்றவர்களை சிறை பிடித்தனர். இதனால் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
விருநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ளது நரிக்குடி. இதன் அருகில் உள்ள உலக்குடி வழியாக கிருதுமால்நதி செல்கிறது. இந்த ஆற்றில் மணல் அள்ள அரசு காண்ட்ராக்ட் விட்டுள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி மணல் அள்ள பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்த அருப்புக்கோட்டை சப் - இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை கலைந்து போக உத்தரவிட்டார். ஆனால் அதை கேட்காமல் சப்- இன்ஸ்பெக்டருடன் வந்த ஏட்டு முத்து முனியாண்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென சிலர் ஏட்டு முத்து முனியாண்டியை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் ஏட்டு மீது தாக்குதல் நடத்திய 5 பேரை காவல் துறையினர் பிடித்து வைத்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி பொது மக்கள் விடியவிடிய காவல் நிலையத்தை முற்றுக்கையிட்டனர்.
இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முன்னாள் எம்எல்ஏ பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், ஏட்டை தாக்கியவர்களை போலீஸில் ஒப்படைப்பது என்றும், போலீஸ் பிடித்து சென்ற மூர்த்தி, கருப்பண்ணன், அங்குசாமி, முத்துசாமி, ராமசந்திரன் ஆகியோரை போலீஸார் விடுவிப்பது என்றும் என்று முடிவானது. இதையடுத்து அங்கு அமைதி திரும்பியது.