கிரண்பேடி ராஜினாமா: மத்திய அரசு ஏற்பு

1972ம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக கிரண் பேடி தேர்வு பெற்றார். ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற கிரண்பேடி பல மாநிலங்கள் காவல்துறையின் உயர் பதவிகளை வகித்துள்ளார்.
மிசோராம் மாநிலத்தின் டிஐஜியாகவும், சண்டிகாரில் ஐஜியாகவும், டெல்லி திகார் சிறையில் ஐ.ஜியாகவும் பணியாற்றினார். தான் வகித்த அனைத்து பதவிகளிலும் நேர்மை, நியாயத்தை நிலை நாட்டியவர். ஊழலற்ற, மிக தைரியமான அதிகாரி என பெயர் வாங்கியவர்.
இந் நிலையில் சமீபத்தில் டெல்லி காவல்துறை கமிஷனராக இவரைவிட 2 வருட ஜூனியரான ஒய்.எஸ்.தத்வாலை அம் மாநில அரசு நியமித்தது. இந்தப் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த பேடி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக எனது பணியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறி கடந்த மாதம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அவரின் ராஜினாமா கடிதத்தை உடனே ஏற்காத மத்திய அரசு, அதை நிலுவையில் வைத்திருந்தது.
இந் நிலையில் இன்று அவரது விருப்ப ஓய்வை ஏற்றுக் கொண்டதாக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கிரண்பேடி கூறுகையில், நான் அரசுடன் சேர்ந்து பணிபுரியத் தான் விரும்புகிறேன். ஆனால் அரசுக்காக பணியாற்ற விரும்பவில்லை. சமூக சேவைக்காக போலீஸ் பணியிலிருந்து விடுபடுகிறேன் என்றார்.
கிரண்பேடி ராஜினாமா கடிதத்தை அனுப்பும் போது, தனக்கு அளிக்கப்பட்ட மகசசே விருதையும் சேர்த்தே அரசுக்கு அனுப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், கிரண்பேடி விரும்பினால் அவர் டெல்லி காவல்துறை திட்டக் கமிஷனில் பணியை தொடரலாம் என்று அறிவித்திருந்தது. ஆனால் அதை ஏற்க கிரண்பேடி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications