விடுதலைப் புலிகளைக் கண்காணிக்க புதிய விமான தளம்
ராமநாதபுரம்: விடுதலைப் புலிகளின் விமான பலத்தால், தமிழக கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு தமிழகம் அல்லது புதுவையில் விமான தளத்தை அமைக்க இந்திய கடலோரக் காவல் படை திட்டமிட்டுள்ளது.
கிழக்குப் பிராந்திய இந்திய கடலோரக் காவல் படை ஐஜி ராஜேந்திர சிங் ராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். பின்னர் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப் பகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். கடலோரப் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் ராமநாதபுரம் திரும்பிய அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தஞ்சையில் உள்ள விமானப்படை அதிகாரிகள், புதுச்சேரி மற்றும் தூத்துக்குடியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகளுடன் விமான தளம் அமைப்பது குறித்து பேச்சு நடந்து வருகிறது.
தமிழகம் அல்லது புதுச்சேரியில் விமான தளத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்தில் அமைப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
விமான தளம் அமைப்பது தொடர்பான ஒப்புதல் கிடைத்தவுடன் கடலோரக் காவல் படையின் கண்காணிப்பு விமானங்களான டொர்னியர் ரக விமானங்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்படும்.
புலிகளால் மிரட்டல் இல்லை:
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு விடுதலைப் புலிகளால் எந்தவித மிரட்டலும் தற்போதைக்கு இல்லை. கிழக்குக் கடலோரப் பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.
தமிழகத்திலும், ஒரிசா மாநிலம் கோபால்பூரிலும் தலா ஒரு அதி நவீன கடலோரக் காவல் படை நிலையம் அமைக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் நாகை உள்ளிட்ட 3 இடங்களில் இந்த நிலையம் அமைக்கப்படும். இடம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசைக் கோரியுள்ளோம்.
இந்த நிலையங்களில் பெரிய கப்பல்கள், இடை மறித்துத் தாக்கும் விமானங்கள் ஆகியவை பணியில் ஈடுபடுத்தப்படும். இதுதவிர அதி நவீன தகவல் தொடர்பு மையமும் அமைக்கப்படும்.
சர்வதேச கடல் எல்லைப் பகுதியில், இலங்கையுடன் இணைந்து கூட்டு ரோந்து செல்லும் திட்டம் எதுவும் இல்லை. இதுதொடர்பான முடிவை மத்திய அரசுதான் எடுக்கும்.
தமிழக காவல்துறையுடன் இணைந்து கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடலோர காவல் நிலையங்கள் மிகவும் சிறப்பாக செயலாற்றி வருகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications