குடிநீரில் கழிவு நீர்-வாந்தி, பேதியால் பலர் பாதிப்பு
சென்னை: சென்னை சூளை பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்து கொண்டுள்ளது. இதையடுத்து அப் பகுதியில் பலருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.
சூளை தட்டாங்குளம் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்துள்ளது. இதைக் குடித்த 5 பெண்கள் உள்பட 15 பேருக்கு வாந்தி ஏற்பட்டது. சிலருக்கு வயிற்றுப் போக்கும் உண்டானது.
இதையடுத்து அவர்களில் பலர் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய்த் தடுப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டவர்களில் நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நான்சி (19) என்ற பெண்ணும் அடங்குவார்.
கடந்த 10 நாட்களாகவே இந்த பகுதியில் குடிநீர் குழாயில் கழிவு நீரும் கலந்து வருவதாக இப் பகுதியினர் புகார் கூறுகின்றனர். ஆனால், அதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இப்போது வாந்தி, பேதி பரவியுள்ள நிலையில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், டாக்டர்கள் குழுவுடன் இப் பகுதிக்கு வந்து காலரா தடுப்பு மருந்துகளை வழங்கி வருகின்றனர்.
சுமார் 500 பேருக்கு காலரா தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. கழிவு நீர் கலந்து வந்த குழாய்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, லாரிகள் மூலம் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.
குடிநீரை காய்ச்சி குடிக்குமாறும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளையெல்லாம் முன்பே எடுத்திருக்க வேண்டிய அதிகாரிகள் மக்கள் பாதிக்கப்பட்ட பின்னர் அறிவுரை சொல்வது வேதனை.