தமிழகத்தில் பெரும் தாக்குதலுக்கு நக்சலைட்டுகள் திட்டம்: 6 பேருக்கு வலை
சென்னை: தமிழகத்தில் பெரும் நாச வேலைகளில் ஈடுபடும் திட்டத்துடன் 6 நக்சலைட்டுகள் உலா வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒரு பெண்ணின் தலைமையில் அனுப்பப்பட்டுள்ள இந்த கும்பலைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.
தமிழகத்தில் சமீப காலமாக நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முன்பு வட மாவட்டங்களில் தலை தூக்கியிருந்த நக்சல்வாதம் தற்போது தென் தமிழகத்திற்கு தனது இலக்கை திருப்பியுள்ளது.
குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை புதிய தளமாக அவர்கள் மாற்றியுள்ளனர். சமீபத்தில் பெரியகுளம் அருகே முருகமலை மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் பிடிபட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு வருசநாட்டு மலைப் பகுதியில் 5 நக்சலைட்டுகளை போலீஸார் கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் மடக்கிப் பிடித்தனர். அவர்களில் ஒருவர் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்என்பதால் போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பெரும் தாக்குதலை நடத்தும் பொருட்டு ஒரு பெண்ணின் தலைமையில் 6 பேர் கொண்ட நக்சலைட்டுகள் ஊடுறுவியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலை வருசநாட்டு மலைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது பிடிபட்ட நக்சலைட் தலைவர் மகாலிங்கம்தான் போலீஸாருக்குக் கொடுத்துள்ளார்.
முன்பு பெரியகுளம் அருகே பிடிபட்ட நக்சலைட் சுந்தரமூர்த்தியின் மனைவி சந்திராதான் இந்த நக்சலைட் கும்பலின் தலைவியாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் காளிதாஸ், சேகர், வேலு, ராஜா, நவீன் பிரசாத் ஆகியோர் அடங்கிய கும்பல் தமிழகத்தில் பெரும் நாச வேலைகளில் ஈடுபடும் திட்டத்துடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஊடுறுவியுள்ளதாம்.
இவர்களைப் பிடிக்க போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து 6 பேரையும் தேடி வருகின்றனர். தேனி மாவட்ட மலைப் பகுதிகளில் தீவிர வேட்டை நடந்து வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications