2011ல் ஆட்சியை பிடிப்போம்-பாமக
கோவில்பட்டி: தமிழகத்தில் வரும் 2011ம் ஆண்டில் பாமக ஆட்சியை பிடிக்கும் என அக் கட்சியைச் சேர்ந்த மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் பொன்னுச்சாமி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
வில்லிச்சேரி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடித்த சூறாவளி காற்றில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச் சோள பயிர்கள் சேதமாகியுள்ளன. கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் பலனை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் பயிர்கள் நாசமாகி விட்டதால் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் நஷ்டஈடு வழங்க வேண்டும். கடந்த 23ம் தேதி எனது தொகுதிக்கு வந்த முதல்வரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 தர வலியுறுத்தினேன். அவர் ரூ.6,000 தருவதாக உறுதியளித்தார்.
அதே போல் இப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும் ரூ.6,000 வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும். இந்த தொகையை மாவட்ட ஆட்சியர் மூலம் விரைவில் வழங்க வேண்டும்.
பாமக இலவசங்களை நம்புவதில்லை. மக்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். தமிழகத்தில் வரும் 2011ம் ஆண்டில் பாமக ஆட்சியை பிடிக்கும் என்றார் பொன்னுசாமி.












Click it and Unblock the Notifications