நேரு சிலையை அகற்றியதால் நீலகிரியில் பதட்டம்
நீலகிரி: நீலகிரியில் நேரு சிலையை அதிகாரிகள் அற்றியதால் அங்கு பதட்டம் நிலவுகின்றது.
நீலகிரி மாவட்டம், அரவங்காடு அருகில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் 1962ம் ஆண்டு நேருவின் சிலை வைக்கப்பட்டது.
சிலையால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதால் அதிகாரிகள் இந்த சிலையை அகற்றினர்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த சிலை அகற்றப்பட்டது. நேரு சிலையை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும் சிலையை வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஐஎன்டியூசி தொழிற்சங்கம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், அரசு எந்த பதிலும் தராததால் ஐஎன்டியுசி நகரத் தலைவர் மைதீன் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மைதீன் கூறுகையில், இந்த வெடி மருந்து தொழிற்சாலையில் முன்பு 6,000 பேர் வேலை செய்தனர். அப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படவில்லை. ஆனால், இப்போது வெறும் 2,000 தொழிலாளர்களே உள்ளனர். அப்படி இருக்கையில் எப்படி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.
தேச தலைவரை அவமானப்படுத்தும் நோக்கில் அந்த சிலையை அகற்றி அருகில் உள்ள ஒரு பூங்காவில் வைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இப்பிரச்சனையில் மத்திய , மாநில அரசுகள் உடனே தலையிட வேண்டும். நேரு சிலையை அகற்றிய அதிகாரிகள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.