தியேட்டரில் சில்மிஷம் - தர்ம அடி வாங்கியவர் தற்கொலை
நாமக்கல்: நாமக்கல் அருகே சினிமா தியேட்டரில் சில்மிஷம் செய்து தர்ம அடி வாங்கிய வாலிபர், ஆசிட் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே உள்ளது வெப்படை என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் வசந்த் (30). இவருடைய மனைவி சாந்தி (24 ).
இருவரும் அருகில் ஒரு சினிமா தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றுள்ளனர். படம் பார்த்துக் கொண்டு இருந்தபோது, பின் சீட்டில் இருந்த நபர் சாந்தியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
முதலில் தனது கணவர்தான் இவ்வாறு செய்வதாக நினைத்துள்ளார் சாந்தி. ஆனால் பின் சீட்டில் இருப்பவர் செய்த சேட்டை அது என தெரிய வந்ததும் எழுந்து நின்று சத்தம் போட்டார்.
இதையடுத்து அந்த நபரைப் பிடித்து அனைவரும் சரமாரியாக அடித்துள்ளனர். அப்போது அந்த நபர், திடீரென தனது கையில் வைத்திருந்த ஆசிடை எடுத்து சாந்தி மீது ஊற்றினார். வலி தாங்க முடியாமல் சாந்தி அலறினார். பின்னர் மீதமிருந்த ஆசிடை எடுத்து அந்த நபர் குடித்து விட்டார். இதில் அங்கேயே அவர் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த சாந்தியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.