அருகி வரும் வெள்ளையர்கள்!
லண்டன்: இங்கிலாந்தில் இன்னும் 30 ஆண்டுகளில் வெள்ளையர்கள் மைனாரிட்டி ஆகி விடுவார்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சூரியன் உதிக்கும் பகுதியெல்லாம் எங்கள் நாடு என்ற மிதப்புடன் ஒரு காலத்தில் உலகின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதேசம் இங்கிலாந்து.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இங்கிலாந்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அதன் கீழ் இருந்த நாடுகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
இப்போது புதிதாக ஒரு வினோதமான நிலை உருவாகியுள்ளது. அதில், இங்கிலாந்தில் வெள்ளையர் இனத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறதாம். இன்னும் 30 ஆண்டுகளில் வெள்ளையர் இனத்தவர்கள் அங்கு சிறுபான்மையினர் ஆகி விடுவார்கள் என்று ஷெபீல்டு பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வு கூறுகிறது.
வெள்ளையர்களின் எண்ணிக்கை இப்படிக் குறைவதற்கு பல்வேறு நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே முக்கிய காரணம்.
இங்கிலாந்தில் குடியேறியுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களிடையே பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறதாம். இதன் காரணமாக வெள்ளையர் - வெள்ளையர் அல்லாதவர்களுக்கு இடையிலான வித்தியாசம் குறைந்து வருகிறது.
லீசெஸ்டர் நகரில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். இங்கு 1991ம் ஆண்டு வெள்ளையர்களின் எண்ணிக்கை 70.1 சதவீதமாக இருந்தது. ஆனால் இன்று அது 59.5 சதவீதமாக குறைந்து விட்டது. 2020ம் ஆண்டு வாக்கில் இது இன்னும் வெகுவாக குறைந்து விடுமாம்.
அதேபோல இதே கால கட்டத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக உயர்ந்து விடும். ஆப்பிரிக்கர்களின் எண்ணிக்கை 11.2 சதவீதமாக உயரும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
அதேபோல பிரிமிங்காம் நகரில் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
லண்டனில் வெள்ளையர்களுக்கு ஆபத்தில்லை. 2026ம் ஆண்டு அங்கு வெள்ளையர்களின் எண்ணிக்கை 61 சதவீதமாக இருக்குமாம்.
மொத்தத்தில், நீண்ட காலத்திற்கு வெளிநாட்டினர் மீதான வெள்ளையர்களின் ஆதிக்கம் தொடர முடியாது. ஆசிய, ஆப்பிரிக்க சமூகத்தினரின் எண்ணிக்கை வெள்ளையர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்து விடும். 12க்கும் மேற்பட்ட நகரங்களில் வெள்ளையர்கள் சிறுபான்மை ஆகி விடுவார்கள் என அந்த ஆய்வு கூறுகிறது.
இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட வெள்ளையர்கள் அருகி வருவதைத் தடுக்க முடியாது. அந்த அளவுக்கு நிலைமை ஏற்கனவே கையை மீறிப் போய் விட்டது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.