ஹைதாராபாத், உ.பி. குண்டுவெடிப்பு: தாவூத் இப்ராகிம் தொடர்பு அம்பலம்

லக்னோ: ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் உ.பி. மாநிலத்தில் நடந்த பல்வேறு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
உ.பியில் கடந்த வாரம் முகமமது அப்துல் மஜீத் உள்ளிட்ட இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஹர்கத் உல் ஜிஹாத் எனப்படும் ஹூஜி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களிடம் உ.பி. போலீஸார் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை மஜீத் வெளியிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள புகழ் பெற்ற மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புக்கும், உ.பியில் நடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கும் தாவூத் இப்ராகிமுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக மஜீத் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது பாகிஸ்தானில்தான் தாவூத் தங்கியிருப்பதாகவும், ஹூஜி அமைப்பினர் மூலம் இந்தியாவுக்குள் பெருமளவில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு வருவதாகவும் மஜீத் தெரிவித்துள்ளார்.
தற்போது இரு தீவிரவாதிகளிடமும் ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் மாநில போலீஸாரும் விசாரணை நடத்த வரவுள்ளனர்.
இந்த விசாரணையின்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இல்லை என்று அந்நாட்டு அரசு தொடர்ந்து பிடிவாதமாக கூறி வருகிறது. ஆனால் தாவூத் பாகிஸ்தானில்தான் இருப்பதாகவும், அவர்தான் இந்தியாவில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் எனவும் பிடிபட்டுள்ள ஹூஜி தீவிரவாதி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் தாவூத் முக்கியக் குற்றவாளியாக உள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications