மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு-மாயாவதி
பாலியா (உத்தரப்பிரதேசம்): மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி, நமது நாட்டில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு மத்திய அரசே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தில் உரத் தட்டுப்பாடும், மின்சாரப் பற்றாக்குறையும் உள்ளது. இதைப் போக்க மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் ரூ.80,000 கோடி நிதியுதவி கேட்டிருந்தேன். ஆனால் இதுகுறித்து இதுவரை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை தடுக்க காங்கிரசும், பாஜகவும் சதி செய்கின்றன. மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்றார் மாயாவதி.