கடற்படை - விடுதலைப் புலிகள் கடும் சண்டை - பலர் பலி
கொழும்பு: இலங்கையில், நடுக் கடலில் விடுதலைப் புலிகளுடன் நடந்த கடும் சண்டையில், இலங்கை கடற்படைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். புலிகள் தரப்பில் 40 பேர் கொல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், வட மேற்கு கடல் பகுதியில், யாழ்ப்பாணம் அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், கடற்படைக்கும் இடையே, கடும் சண்டை மூண்டது.
16 படகுகளில் ஆயுதங்களுடன் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் சென்று கொண்டிருந்ததைப் பார்த்த கடற்படையினர்கள் அவர்களை துரத்திச் சென்றனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.
இந்த மோதலில் 6 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், 40 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
ஆனால் தங்கள் மீது தாக்குதல் நடத்திய கடற்படை கப்பலை முழுமையாக தகர்த்து விட்டதாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்தவர்கள் பலியாகி விட்டதாகவும் புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.