திருச்சி: விமானம் மீது பறவை மோதல்-110 பயணிகள் தப்பினர்
திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானம் தரையிறங்கும்போது பறவை மோதியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் 110 பயணிகளும் உயிர் தப்பினர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி, சென்னை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் நேற்று முற்பகல் 11.05 மணிக்கு திருச்சி வந்தது. அதில் 110 பயணிகள் இருந்தனர்.
விமானம் தரையிங்கத் தயாரானபோது திடீரென விமான என்ஜினில் பறவை மோதியது. இதனால் விமானத்தைத் தரையிறக்க முடியாமல் விமானி தவித்தார். இதனால் சுமார் அரை மணி நேரம் வானிலேயே விமானம் வட்டமடித்தபடி இருந்தது.
பின்னர் மிகுந்த முன்னெச்சரிக்கையுன், மிகவும் சாதுரியமாக தரையிறக்கினார். விமானமும், பயணிகளும் எந்த ஆபத்துமில்லாமல் தரையிறங்கினர்.
பின்னர் திருச்சியில் இறங்க வேண்டிய பயணிகள் மட்டும் விமானத்திலிருந்து இறங்கினர். சென்னை பயணிகள் விமானத்திலேயே இருந்தனர். மேலும் சிங்கப்பூர் செல்ல வேண்டிய 100 பயணிகளும் காத்திருந்தனர்.
அதன் பின்னர் விமான என்ஜின் பரிசோதிக்கப்பட்டது. அப்போது என்ஜினின் சில பாகங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதால் அது சரியான பின்னரே விமானத்தை இயக்க முடியும் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை செல்ல வேண்டிய 24 பேரும் பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். சிங்கப்பூர் பயணிகள் 100 பேரும் தொடர்ந்து விமான நிலையத்தில் காத்திருந்தனர். மாலை வரை விமானம் சரியாகவில்லை. இதையடுத்து இன்று மாற்று விமானத்தில் அவர்களை சிங்கப்பூர் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications