பெனாசிர் படுகொலை - பிரதீபா, மன்மோகன், சோனியா கண்டனம்
டெல்லி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு இந்தியா பேரதிர்ச்சியையும், பூட்டோ குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் செல்வாக்குள்ள இளம் தலைவராக பெனாசிர் பூட்டோ விளங்கினார். அவரது படுகொலை பாகிஸ்தான் மக்களுக்கு பெரும் இழப்பாகும்.
மிகக் கொடூரமான முறையில் பெனாசிர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
துணிச்சல் மிக்க பெனாசிர் - மன்மோகன் சிங்
கோவா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் அங்கிருந்து வெளியிட்ட அறிக்கையில், இந்தியத் துணைக் கண்டத்தின் துணிச்சல் மிக்க, மிகச் சிறந்த பெண்மணி பெனாசிர். இந்திய, பாகிஸ்தான் நல்லுறவை மேம்படுத்த அவர் அயராது பாடுபட்டார்.
அவரது படுகொலைச் சம்பவம், பயங்கரவாதத்தின் பயங்கர முகத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.
இந்தப் பிராந்தியம் இப்படிப்பட்ட கோழைத்தனமான தீவிரவாதிகளால் சந்தித்து வரும் ஆபத்துக்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த மிரட்டலை சந்திக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
பூட்டோவின் மிகக் கொடூரமான படுகொலையைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பாகிஸ்தானுக்கு இது மிகப் பெரும் அதிர்ச்சியாகும் என்று கூறியுள்ளார்.
ஜனநாயகத்திற்கு பேரிடி - வாஜ்பாய்:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்திற்கும், நாகரிகமடைந்த சமூகத்திற்கும் இது மிகப் பெரிய பேரிடியாகும்.
தனது நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் பொருட்டே பெனாசிர் தாயகம் திரும்பியிருந்தார். மிகச் சிறந்த அரசியல் எதிர்காலம் அவருக்காக காத்திருந்தது.
இப்போது பாகிஸ்தான் மட்டும் தீவிரவாதத்தின் மிரட்டலை சந்திக்கவில்லை. அந்த நாட்டோடு இதன் பின்விளைவுகள் நின்று விடாது. ஜனநாயகத்திற்கும், அமைதியை விரும்பும் சமுதாயத்திற்கும் இது மிகப் பெரும் மிரட்டலாகும்.
இந்த சவாலை அனைவரும் ஒருங்கிணைந்து, உறுதியோடு எதிர்கொண்டு வெல்ல முயல வேண்டும் என்று கூறியுள்ளார்.
சோனியா அதிர்ச்சி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்கட்டான நிலையை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தானில் நடந்துள்ள இந்தப் படுகொலை பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. புகழ்மிக்க அரசியல் தலைவர் ஒருவரை பாகிஸ்தான் இழந்துள்ளது.
இந்த படுபாதக செயலால் பெனாசிரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் மனோதிடத்துடன் இனி வரும் சவால்களை சந்திக்க வேண்டும்.